வெபர் நீச்சல் பயிற்சி தடாகத்தில் நீச்சல் பயிற்சியை பூர்த்திசெய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

2019-06-25

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட வெபர் மைதானத்தில் உள்ள நீச்சல் பயிற்சி தடாகத்தில் நீச்சல் பயிற்சியை பூர்த்திசெய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் மாகாண மட்டத்தில் சாதனை படைத்த நீச்சல் பயிற்சியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இன்று மாலை நடைபெற்றது.

சுயிம் பெற்றி நிறுவகத்தின் ஊடாக வெபர் மைதானத்தில் உள்ள நீச்சல் பயிற்சி தடாகத்தில் நீச்சல் பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. பாடசாலை மாணவர்கள் மத்தியில் இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

இந்த பயிற்சிகளை பூர்த்திசெய் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கடந்த ஆண்டு மாகாண மட்ட நீச்சல் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் வெபர் மைதானத்தில் உள்ள நீச்சல் பயிற்சி தடாகத்தில் நடைபெற்றது.

சுயிம் பெற்றி நிறுவகத்தின் தலைவரும் பிரதான பயிற்றுவிப்பாளருமான த.சோமஸ்காந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் வசந்தன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் த.ஈஸ்பரன்,மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆதம்லெப்பை,மண்முனை வடக்கு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் பிரசாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நூறு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் மாகாண மட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய 20 மாணவர்கள் வெற்றிக்கிண்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks